Skip to main content

Posts

Showing posts from August, 2020

கருணை

முகிலாய் நின்றனை  குழலென மேல்விரித்த குடை மட்டுமல்ல உன் உவமை   அழல் கொண்ட நெஞ்சங்கள் நெகிழ் நின்ற ஜென்மங்கள் அலைபாயும் மானிடத்தின் அவலநிலைக் கிறுதியென்று உனக்குள்ளே பூத்திருக்கும் சின்னஞ்சிறு நீர்த்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு கனவு கனல் கெட்டு வெறும் கரிபூசி நிற்பினும் உள்ளுக்குள் உயிர்த்திருக்கும் மின்பூச்சிகள் ஒவ்வொன்றுமொரு நம்பிக்கையென அதைச் சுமந்தொரு   முகிலாய் நீ நின்றனை பின்னொரு மழையாய் பெய்தனை அகலிடம்* அதன்மேலே படிந்துள்ள துயரெலாம் பொடியாக்கி  கலைத்தனை உனக்குள்ளே கரைத்தனை அதெயெல்லாம் சுமந்தொரு விசையினில் பாய்ந்தனை சிறு ஓடைகளெனச்சுமந்து பெருநதியாயிப் புவிவிரிந்து பின் துயரடங்கா கரும்கடலென கலந்தனை துயர் துடைத்து நீ துலக்கிய மனவெளியில் ஒரு கோடி புன்னகைகள் பூத்தெங்கும் ஒளிபரப்ப நிறை நெகிழ்வில் நனவுலகில் கதிர் பரவும் விதை பிளந்து பூ பூத்து காய்பழுத்து கனியாகி பின் விதையாகி புத்துயிர்ப்பிறக்கும்  நம்பிக்கைநீட்டியவர்க்கு பொய்க்காத வரம்கொடுக்க மறுபடியும் நீ முகிலாகி நின்றனை *அகலிடம் : பூமி  pic courtesy

ஒருமை

நான் என்பதறியாமை நீ என்பதியலாமை நாமென்பதே புவிஇயக்கம் உறவின்றி அசையாது அணுவதுவும்  pic courtesy